வியாழன், 28 மே, 2015

என்னோடு சில வார்த்தைகள்.....

இப் பூகோலத்தில் பலர் இயந்திரத்தனமாய் எங்கெங்கோ.... ஏதெதெற்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தை அசை போடுகையில் கிடைக்கும் விடையிலும் ஏதோ சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். எப்போதும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு இருப்பதும் அப்படியான பரபரப்பிற்காய் ஏதேதோ இலக்குகளுடன் காத்துக் கிடப்பதும் புரிகிறது. என்னைச் சுற்றியும் பலர் ஏதோ பேசிக்கொண்டும், நடுநிலைவாதப் போதையில் அடுத்தவனை விமர்சித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

அடுத்த வீட்டு அபூபக்கர் தாத்தாவுக்கு வயது 60ஜ தாண்டிவிட்டது. அப்படி அதிகம் வயதானதால்தான், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று வருவோர் போவோரிடம் எல்லாம் அலட்டிக் கொண்டு..... "என்ட அனுபவம் உன் வயசு" என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்...

தேசிய அரசியலையும், உலக அரசியலையும் ஒரு கை பார்க்கும் தேநீர் கடையடியில் கூடும் அங்கிள்களும், பென்ஷனான அப்பாக்களும், என் அக்கம் பக்கத்து விடலைகளும், ஏன் சமூகத்தள மேதாவிகளும் தங்களின் கருத்துக்களை எல்லாம் உலக இறுதி உண்மைகளாக எப்போதும் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த செய்திகள், அனுபவங்கள் அவர்களுக்கு கொடுத்த புரிதல்கள், மற்றும் அவரவர்க்கு தோன்றும் கற்பனைகள் எல்லாவற்றையும் திரட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் புலமையைப் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் எடுத்து இயம்பி தன்னை மிகப்பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ள இடைவிடாது முயல்கிறான்....

இங்கே எல்லோருக்கும் ஏதோ ஒரு கருத்து சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியாய் சொல்லும் கருத்தில் பெரும்பாலும் மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கும் மிகுந்திருக்கிறது. அப்படி குறை சொல்லும் போது மறைமுகமாய் தன்னை நல்லவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சுய தம்பட்டம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது...

சிலர், அவ்வப்போது பிறரை பாராட்டவும் செய்கிறார்கள். அப்படி பாராட்டும் போது கூட வெகு சிலரே ஆத்மார்த்தமாக வியந்து, கைகொட்டி சிரித்து ஆச்சர்யமாய் ஒரு குழந்தையைப் போல வாய் பிளந்து பாரட்டுகிறார்கள். மிகையானவர்கள் பாராட்டும் இடம் என்பது கூட நான் பாராட்டுகிறேன், நான் எவ்வளவு பெரிய மனிதர் என்று பார்த்துக் கொள்ளுங்கள் உலகத்தவரே! என்று அறிவிக்கும் பொருட்டே செய்கின்றனர்.

பகிர்தல் என்பதன் அர்த்தம் இங்கே தொலைந்து போய்விட்டது. ஒரு மனிதனுக்குள் தாக்கம் கொடுத்த விடயங்களை சக மனிதர்களிடம் பகிரலாம், நகைச்சுவையாய் அடுத்த மனிதரை சிரிக்க வைக்கும் கருத்துக்களைப் பகிரலாம், அல்லது புதிய தகவல்களை தெரிவிக்கும் வகையில் பகிரலாம்.

இப்படியாய் பகிர்தல் என்பது அடுத்தவனுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படை தர்மத்தை மறந்து விட்டு, ஒலைப்பெட்டிக்குள் புகுந்த ஓணான் போல எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கற்றுக் கொள்ள நம்மைச் சுற்றி குறைவான மனிதர்களே இருக்கிறார்கள், ஆனால் கற்றுக் கொடுக்க நிறைய பேர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை விட அவர்களுக்குச் சேவை செய்கிறேன் என்று கிளம்பியிருக்கும் மனிதர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். பகிர்தலில் தங்களின் அனுபவத்தையும் அறிவையும் பகிர இங்குள்ள பலரும் தயாரில்லை.

நீ இப்படி இரு...அல்லது அப்படி இரு...., இது தவறு, இது சரி, என்று புள்ளி விபரங்களை வளர்ந்திருக்கும் இன்றைய நவீன ஊடகங்கள் மூலம் சிலவற்றை தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு புலமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்வீட்டுக்காரனையும் யாரென்று தெரிந்து கொள்ளாமல், உறவுகளை சரியாக பயன்படுத்துவது எப்படி என்ற புரிதல் இல்லாமல், சகோதரத்துவத்தையும் அன்பையும் பற்றி எழுதியும் பேசியும் என்ன லாபம் இருக்கிறது..?

இதனால் தான் நான் பல நேரங்களில் மெளனித்து விடுகிறேன். காரணம் எனக்கு அர்த்தமற்றப் பேச்சுக்களிலும் நேரத்தை விழுங்கும் வெற்று அரட்டைகளிலும் அக்கறை கிடையாது.

வாழ்க்கையில் எனக்கொரு பிடிப்பும் கிடையாதுதான், ஆமாம் எல்லாவற்றையும் தலைக்கு எடுத்துக் கொண்டு கனமாய் நகரவிரும்பவில்லை நான்.  "வாழ்க்கையில் தன்மீது அக்கறை காட்டும் ஒரு உறவு இருந்தால் இன்னும் 100 வருஷமும் வாழலாம்" என்று சொல்லும் ஒரு பாட்டியின் குரலையும் அண்மைய தமிழ் திரைப்படம் ஒன்றில் கேட்க கிடைத்தது. உண்மைதான் என்றாலும் ஒரு மெல்லிய மனிதனாய், எளிதான வாழ்க்கையை வாழ்வதில் எனக்கு யாதொரு சிக்கல்களும் இல்லை.

இந்தக்கணத்தில் கிடைக்கும் பிணைப்பு அடுத்த கணத்தில் எனக்கு இரணத்தை கொடுக்கிறது. இந்தக் கணத்தில் நான் பிணைப்பிட்டுக் கொள்ளாமலே இருந்தால் எனக்கு வலிகளோ இந்த இரணங்களோ வரப்போவதில்லை...! புரிதலின்மையால் கடந்த கால பிணைப்புகள் கொடுத்திருக்கும் இரணங்கள் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் கடந்த காலத்தில் செய்த சில இலகுவான காரியங்கள் என்னை காற்றில் சிறகடித்துப் பறக்கவும் செய்கின்றன.

மெல்லியதொரு  புன்முறுவலை எப்போதும் என் முகத்துடன் அப்பி கொள்ள முயற்சிக்கிறேன். அது மனிதர்களை எளிமையாக கர்வமின்றி கையாள ஆரம்பிக்கும் போதுதான் சாத்தியமாகும். இயல்பாய் சிரித்து ... அன்பை பகிரும் போதெல்லாம், என் சுற்றமும் நட்பும் அதையே எனக்குச் திரும்பச் செய்தது...செய்கின்றது...

உலகம் எப்போதும் போற்றியும் தூற்றியும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள்... வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறது. உங்கள் கருத்துக்களால் என்னை யாரும் நிரப்ப முயலாதீர்கள்....அதே நேரத்தில் என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டுமா என்றும் என்னிடம் கேட்காதீர்கள்.

உலகப்பிரச்சினைகளை உரசிப்பார்த்து அதை உங்களின் பொழுது போக்காய் ஆக்கிக் கொள்ளுங்கள்.

நான் வழியில் கிடக்கும் முட்களையும், கற்களையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு கடந்த கால குப்பைகளை எறிந்து கொண்டு என் வழியில் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

தலை சிறந்த மனிதராய், உலகம் போற்றும் சமூக சேவகனாய், புகழ் பெற்ற தலைவராய், மிகப்பெரிய ஆன்மீக தலைவராய், மேதாவியாய், 

நீங்கள் வாழ்ந்து விட்டுப் போங்கள்...

சனி, 4 ஏப்ரல், 2015

எனது தேடலும் இன்ன பிறவும்.....

இவ் வலைப்பூவை ஆரம்பித்து ஏறக்குறைய ஆறு வருடங்கள் கடந்து விட்டது எனினும் எழுதியதென்னவோ மிகக்குறைவுதான். இந்த ஆறு வருடங்களில் என் வாழ்க்கை பலவாறு மாறிப் போயிருக்கிறது. காலம் என்னை அதனோடு அடித்துச் சென்றிருக்கிறது. மகிழ்ச்சியை விடவும் பெருந்துயரங்களை தந்து அழவும், ஏன் அதனை ஏற்றுக்கொள்ளவும் கற்றுத்தந்திருக்கிறது. சிறுவயது முதல் இருந்த தேடல் முடிந்து போகவில்லை என்றாலும் இதற்கான ஆவலும் சுவாரஷ்யமும் குறைந்து போனதென்னவோ உண்மைதான். எதையுமே ஆச்சர்யமாய் பார்க்கத் தோன்றாத மனோநிலையும், ஏமாற்றங்களும் எவர் எதைப் பேசினாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளுமொரு மனோபாவம் பளீச் என்று  என் மனதில் ஒரு குரங்கு குட்டியாய் என் முன் துள்ளிக் குதித்து அவர்களை அடையாளப்படுத்தி விடுவதாலும்...எனக்குள் இருக்கும் குரங்குக் குட்டியை கட்டி மேய்க்கவே நேரம் எனக்கு சரியாய் இருப்பதாலும் தேடலுக்கும் எழுத்துக்கும் தூரம் அதிகமாய்த்தான் போய்விட்டது.

எனது இருப்பை நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அடிப்படையானதொரு எண்ணத்திலிருந்து கிளைத்து எழும் ஓராயிரம் வேசங்கள்தான் மனிதர்களின் செயல்களாகிப் போகிறது. நான் எதையாவது எழுதுவதை தயவு செய்து என் புலம்பலாய், நான் எனக்குள் பேசும் ஒரு பாவனையாய் ஆக்கிக் கொள் என் மனமே என்ற என் வேண்டுதல் பல நேரங்களில் பலிக்காமலும் சில நேரங்களில் பலித்தும் போயிருக்கிறது. எழுதுவது இங்கே மிகப்பெரிய வித்தையாய் பார்க்கப்படுகிறது. எழுதுபவன் மட்டும் இங்கே தன்னை வேற்றுக்கிரக வாசியாய் நினைத்துக் கொள்வது கிடையாது, வாசிப்பவர்களும் அப்படியே நினைக்கிறார்கள்.

சுற்றி நிகழும் நிகழ்வுகளை, ஏதேதோ புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை, உள்ளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வலிகளை, வாழ்க்கை போதிக்கும் பாடங்களை முழுமையாய் வாங்கிக்கொண்டு அந்த உணர்வினை தனக்குள் வகைப்படுத்தி, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் கோர்வையாய் கொண்டு வரத்தெரிந்தவன் இங்கே எழுத்தாளன் ஆகிப் போகிறான். அதாவது சொல்ல வரும் விசயத்தை வார்த்தைகளில் சரியாய் அடுக்கி வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனக்குள் இருக்கும் உணர்வுகளை என்னை புரிந்த ஒரு மனிதரிடமோ, அல்லது படைத்த இறைவனிடமோ அல்லது எனக்குள் நான் பேசியோ பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். பல நேரங்களில் ஓ...என்று சாய்ந்து அழ எனக்கு ஒரு தோள் தேவைப்படுகிறது. அந்த தோள் என் சோகத்தை ஆராயாமல் தன்னுடைய யோசனைகளை எனக்குச் சொல்லி என்னை ஆக்கிரமித்து விடாமல், வாங்கிக் கொள்ளும் தன்மைகளோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இங்கே வலி என்று பகிர முயலும் போதே மனிதர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். தத்துவாசிரியர்கள் நிறைந்த உலகமாய் இது போய்விட்டது. எல்லோரும் கருத்து சொல்கிறார்கள். பணம் சம்பாதிப்பதைப் பெருமையாய் நினைக்கிறார்கள். கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே அவர்களும் கீழே விழுகிறார்கள். இதைத்தான் போலும் எனது ஊர் பேச்சு வழக்கில் "சுற்றிச் சுற்றிப் சுப்பருடைய வட்டைக்குள்தான்" என்று சொல்லுவார்கள். ஆனாலும் என்ன இவர்கள் இதனை மறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு, இத்துனூண்டு வாழ்க்கை இதுக்கு ஏன் இவ்வளவு இறுக்கம்? தலைக்கனம்? திமிர்...? என்று...! ஆமாம்.. நாம் வாழும் வாழ்க்கையின் நீளம் பிரபஞ்சக் கணக்கின் முன்னால் தூசியினை ஆயிரம் தடவை பகுத்துப் பார்த்து, அதையும் கோடி முறை பகுத்துப் பார்த்தாலும் அதைக்காட்டிலும் சிறியது. மனிதர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள இங்கே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...! நான் முந்தியா நீ முந்தியா என்ற போட்டி இடை விடாது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  

போட்டியிலிருந்து நான் விலகி நிற்க எனக்கு காலம் உதவியது. நான் இங்கே இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் யாரிடமும் பகிர விரும்பவில்லை. இப்படியான என் மனோநிலையில் எனது இருப்பு சார்ந்த உணர்வுகளை யாரிடம் சொல்வது....? சாய்ந்து அழ தோள் கிடைக்காத ஒரு நிராயுதபாணியின் கதறலாய்த்தான் என் எழுத்துக்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே சிறப்பு என்று எதுவும் கிடையாது. பிரபஞ்சப் பேரியக்கம்  இடும் பிச்சையை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நாம். இதில் பெரிய பிச்சைக்காரன் சிறிய பிச்சைக்காரன்,  அறிவாளி பிச்சைக்காரன், முட்டாள் பிச்சைக்காரன், அதிகாரம் கொண்ட பிச்சைக்காரன், என்றெல்லாம் வகைப்படுத்தி வேண்டுமானால் கொள்ளலாம். ஆனால்...அத்தனை பேரும் பிச்சைக்காரர்களே...! பிரபஞ்சப் பேரதிர்வின் அலைகள் கடந்து செல்லும் கருவிகள் நாம்.... அவ்வளவே...!

ஒரு இடத்தில் புரிதலோடு வாழ்க்கையை நோக்கி திரும்பிய கணத்தில்தான், அதுவரையில் எவ்வளவு தவறான புரிதல்களோடு வாழ்ந்திருந்திருக்கிறேன் என்ற உண்மை விளங்கியது. சத்தியத்தில் தொடர்பு கொள்ளுதலின் அழுத்தமான ஜோடனையாக உறவுகள்  என் முன் காட்சிப்பட்டுப் போயின. புலன்கள் இழுத்து வந்து போட்ட அனுபவக் கோர்வைகள் எல்லாம் அபத்தமாகி ஒடிந்து விழத் தொடங்கிய கணத்தில் ஆத்மார்த்தமான புரிதல்  கொண்ட ஒரு சிலர்  வார்த்தை பரிமாறல்களும், கவர்ச்சிகரமான பேச்சுகளும், பாவனைகளும், ஜோடனைகளுமின்றி என்னைச் சூழ ஆரம்பித்தனர்.

ஆத்மார்த்த உறவுகள் எப்போதும் புறச்சூழலை வைத்து நம்மிடம் தொடர்பு கொள்வது இல்லை. இந்த உடலுக்குள் இருக்கும் உள்ளமையை விளங்கிக் கொண்டவர்கள் எப்போதும் என்னைப் பற்றி யாதொரு அபிப்ராயமும் கொள்ளாமல், என் வார்த்தைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்று மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். என் சமகால வாழ்க்கையைப் பற்றி அவர்கள் யாதொரு கேள்வியும் கேட்பதில்லை. வாழ்க்கை எப்போதும் தேவைகள் நிறைந்தது இங்கே கொடுத்தலையும், பெறுதலையும் கடந்து நாம் நிற்கும் போதுதான் இதன் முழுமையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். குணம் என்பது சூழ்நிலை என்பதோடு மட்டுமில்லாமல் ஜீன்களின் தாக்கம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.  

மனித வாழ்க்கை சார்ந்து வாழும் வாழ்க்கை என்பதை தவறாகவே போதித்து தவறாகவே பழக்கி விட்டு விடுகிறார்கள். நானும் சார்ந்து வாழ்தல் என்பதை சக மனிதர்கள் மீது கொள்ளும் உரிமையாக எடுத்துக் கொண்டு அதனால் கஷ்டங்களை அனுபவித்தவன். யாரையும் சாராமல் நமது வாழ்வியல் தேவைகளை நாம் செய்து கொண்டே செல்லும் போது நமது செயல்களின் விளைவுகள் யாருக்கோ எப்படியோ சென்று சேர்ந்து விடும். நமது செயல்களுக்கான தர்மத்தையும், நீதியையும் நாம் வரையறுத்துக் கொள்ள எங்கிருந்தோ உதாரணங்களை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் இருந்து நகல் எடுத்து அதன் படியே வாழ முயல்கிறோம் அல்லது இந்த சமூகம் அப்படி நம்மை வாழச் சொல்கிறது.

என்னை சுயமாய் இருக்க ஒரு போதும் இந்த சமூகம் விடவில்லை எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டு மனிதர்கள், எதிர் வீட்டு  உறவுகள், அடுத்த தெருவிலிருப்போர்,  இல்லை யாரோ ஒரு பணக்கரான், யாரோ ஒரு பிச்சைக்காரன், யாரோ ஒரு தொழிலதிபர், ஒரு அறிவாளி, அரசியல்வாதி, நடிகன் என்றெல்லாம் எனக்கு உதாரணம் சொல்லி அது போல நீயும்....என்று ஒரு வசதி செய்து கொடுக்கிறது.

அது போல....நீயும் செய் அல்லது நான் செய்கிறேன் என்று யார் என்னிடம் சொன்னாலும் எழும் கோபத்தை பல நேரங்களில் அடக்கத்தெரியவில்லை. என் கண் முன் இருப்பது எனக்கான ஒரு வாழ்க்கை அதை எவ்வளவு நிறைவாய் நான் வாழ வேண்டும் என்பதற்கு, ஏற்கெனவே வாழ்ந்து முடித்த ஒருவரிலிருந்து உருவி எனக்கு நான் பாடமாக்கிக் கொள்ள வேண்டுமா?

எனது பார்வை புதியது...! எனது காதல் புதியது...! எனது தேடலும், வாழ்க்கையும் புத்தம் புதியது...! அது இதற்கு முன் யாராலும் வாழப்படாததாக முற்றிலும் புதியதாய் புத்துணர்வோடு என்னால் வாழப்படவேண்டும். வரலாறுகளையும் கதைகளையும் நான் என் அனுபவத்திற்காய் கேட்டுக் கொள்கிறேன். பெரிய மனிதர்கள் என்று இந்த சமூகம் கடை பரப்பி இருப்பவர்களின் வாழ்க்கையில் நடந்த நல்ல விசயங்களை மட்டும் வாசித்து விட்டு, சமூகப் பொது புத்தியின் படி...அவர் யாரு தெரியுமா என்று நரம்பு புடைக்க பேசுவது என் வேலையல்ல....

அந்த பெரிய மனிதரின் வாழ்க்கையில் நடந்த யாரும் பார்க்க விரும்பாத பக்கங்களையும் தேடி எடுத்து நான் வாசிக்கிறேன். இது அந்த மனிதரைப் பற்றிய முழுமையான புரிதலை எனக்குக் கொடுக்கிறது. எனக்குள் அவர்கள் பற்றி கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். இது யாரையும் அவமரியாதை செய்யும் ஒரு நிகழ்வாய் எனக்குத் தெரியவில்லை, மாறாக என் சுயத்தை நான் மரியாதை செய்யும் நிகழ்வாய்த்தான் பார்க்கிறேன்.

தொடர்புகள் வாழ்வதற்கு அவசியம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் அதே நேரத்தில் தொடர்புகள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவும் என்றும் அறுதியிட்டு கூற முடியாது. மனித தொடர்புகள் பெரும்பாலும் நம்மை ஆளுமை செய்யவே செய்கிறது. என்னைக் கடந்து அடுத்த நபரிடம் நான் தொடர்பு கொள்ளும் போது அப்படியாய் நான் தொடர்பு கொள்ளும் நபரின் பக்குவமான நிலையும், பக்குவமில்லாத நிலையும் என்னை பாதிக்கச் செய்கின்றன.

குழப்பவாதிகள் குழப்பத்தையும், பேராசைக்காரர்கள் பேராசையையும், ஆணவக்காரர்கள் ஆணவத்தையும், பெருமை பேசுபவர்கள் சுய தம்பட்டத்தையும், கோபக்காரர்கள் கோபத்தையும் எப்படி எனக்கு  கொடுத்துச் செல்கிறார்களோ....

அதே போல.... நிதானமான யோசனை உள்ளவர்களும், தெளிவான புரிதல் உள்ளவர்களும் வாழ்க்கையின் நிலையாமையை விளங்கியவர்களும் அன்பையும், அமைதியையும் தங்களின் இயல்பாய் கொண்டவர்களும்.... அவர்களின் உணர்வுகளை எனக்குக் கொடுத்துச் செல்லவும் செய்கிறார்கள்.

நான் இரண்டாவது சொன்ன வகையினரை விட முதலில் சொன்ன வகையினரே இங்கே மிகுதி சதவீதத்தில் 99.99%. மிகைப்பட்ட பேர்களை விட்டு விலகி நின்று நான் மெளனித்துச் செல்வது ஏன் என்ற எனது கேள்விக்கு எனக்கே இந்த வரிகளை எழுதும் போது விடை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எழுதும் போது தோன்றும் எண்ணங்கள் எனக்குள் இருந்து எழுவது ஆனால் எனக்குச் சொந்தமானது அல்ல...

எனது இறந்தகாலமும் அதன் கற்பிதங்களும் அபத்தங்களை விட்டு என்னை தூர இருக்கச் சொல்லி இருக்கிறது. விலகி இருக்கத்தான் சொல்லி இருக்கிறதே அன்றி கவனிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை.

ப்ரியமாய் நான் இங்கு கிறுக்குவதை வாசிக்கும் என் பாஷை தெரிந்த அத்தனை பேருக்கும் எனது வந்தனங்கள்...!

புதன், 20 மே, 2009

உணர்வுகளும் அதனை ஆளுதலும்....



மனிதம் உணர்வுகளால் பின்னப்பட்டதுதான்
இவ் உணர்வுகளை கட்டு படுத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் சவாலான விடயம் ஒன்றாகவே உள்ளது....
சில நேரங்களில் மேலெழும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போகும் அதே வேளை மேலும் சில நேரங்களில் சில உணர்வுகளை எம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறோம் ...
எந்தெந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியுமாயிருக்கும் என்பதும் முடியாமலிருக்கும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலைகளையும் பொறுத்த விடயம்தான்....

எவை எப்படி இருப்பினும் உணர்வு கட்டுப்பாடு என்பது மன உறுதிப்பாட்டில் தான் தங்கியிருக்கிறது...

இது தொடர்பில் உங்கள் கருத்தையும் சொல்லுங்களன்...

வியாழன், 23 ஏப்ரல், 2009

என் இனிய உள்ளங்களே... நன்றி.....நன்றி...

எனது பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்...... குறுகிய இந்த வாழ்க்கை காலத்தில் நான் பதித்த கால் தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்... பிறந்த போது என்னுடன் இருந்த எனது சொந்தகளுக்கு மேலாக நீங்களும் இப்போது என்னுடன் இருக்கிறீர்கள்... எனது பாடசாலை காலம் முதல் இன்று வரை பல்வேறு மனித முகங்களை உள்ளங்களை சந்தித்திருக்கிறேன்.... இந்த காலத்தில் என்னால் தெரிந்தே யாருக்கும் கெடுதி நினைத்ததில்லை.... ஆனாலும் யாரும் அப்படி நினைத்திருப்பின் மன்னித்து விடுங்கள்... இதுவரை எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், தெரிவிக்க இருக்கிறவர்களுக்கும், தெரிவிக்க மறந்தவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்... நான், நன்றி தெரிவிப்பதையோ மன்னிப்பு வேண்டுவதயோ விரும்புவதில்லை... அதற்காக நீங்களும் அப்படி இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளவுமில்லை ... உங்கள் உணர்வுகளை மதிப்பதனால் தான் மேற்படி நன்றிகளும் மன்னிப்பு கோரலும்... குறுகிய வட்டத்துக்குள் இருந்த எனக்கு இன்று உலகம் முழுதும் பல்லாயிரம் நண்பர்கள்... உங்களை எனக்களித்த இறைவனுக்கு என் முதல் நன்றிகள் .... இரண்டாவதாக எனது பாடசாலைக்கு... அடுத்து இன்று வளர்ந்து உயர்ந்து நிற்கும் இணையத்துக்கு/ அல்லது அதனை தந்தவருக்கு எனது பிரதேச மக்களோடும் நாட்டு இளையவர்களோடும் தொடர்பாக்கிய, எனது திறன் விருத்திக்கு ஊக்கமளித்த 1. பிரதேச செயலகம் - சாய்ந்தமருது (இது எனக்கு நல்ல நண்பர்கள் பலரையும்,உறவுகளையும், நான் என்றும் நேசிக்கும் மேலதிகாரியையும் தந்தது-விஷேடமாக) 2. இலங்கை இளையோர் பாராளுமன்றம் ( இதுதான் எனது வாழ்க்கை பாதை மாற்றத்துக்கு காரணம் என்றால் மிகையல்ல) 3. தேசிய இளையோர் சேவைகள் மன்றம்(செயற்திறன் அற்றிருந்தாலும் பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்) * மூஞ்சிப்புத்தக(Face Book) நண்பர்களுக்கும் எனது விசேட நன்றிகள்..... தெரு விளக்குக்கு வந்து போகும் நீங்கள் எனது இடுகைகளுக்கு பின்னூட்டம் இடுமாறு வேண்டுகிறேன்.... இதுவே எனக்கு தூண்டுகோலாக இருக்கும்.... -------மீண்டுமொருமுறை என்னை வாழ்த்துக்களால் போர்த்தும் நண்பர்களுக்கு நன்றிகள்- ----------என்னை முதலில் வாழ்த்திய தோழியே உமக்கும் நன்றி ------------
உங்களால் ஏற்பட்ட இந்த மன மகிழ்ச்சியை சொல்லில் வடிக்க முடியவில்லை

வெள்ளி, 6 மார்ச், 2009

தலைவாசல்

எடுத்த எடுப்பில் என்று இல்லாமல் கடந்த சில வருடங்களாக வலைப்பூக்கள் பற்றியும் அதனை பாவிப்பவர்கள் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன்.
இப்போதுதான் நாமும் கொஞ்சம் கிறுக்கினால் என்ன?
என்று தோன்றியது.

இணைய வெளி எங்கும் பரந்து கிடக்கும் வலைப்பூக்களுக்கு மத்தியில் எனது வலைப்பூவும் பறக்க எத்தனிக்கும் குருவியின் கீச்சுக் குரலாய் ஒலிக்கிறது.......

எனது வலைப்பூவுக்கு வந்து போகும் அனைவருக்கும் நன்றி