சனி, 4 ஏப்ரல், 2015

எனது தேடலும் இன்ன பிறவும்.....

இவ் வலைப்பூவை ஆரம்பித்து ஏறக்குறைய ஆறு வருடங்கள் கடந்து விட்டது எனினும் எழுதியதென்னவோ மிகக்குறைவுதான். இந்த ஆறு வருடங்களில் என் வாழ்க்கை பலவாறு மாறிப் போயிருக்கிறது. காலம் என்னை அதனோடு அடித்துச் சென்றிருக்கிறது. மகிழ்ச்சியை விடவும் பெருந்துயரங்களை தந்து அழவும், ஏன் அதனை ஏற்றுக்கொள்ளவும் கற்றுத்தந்திருக்கிறது. சிறுவயது முதல் இருந்த தேடல் முடிந்து போகவில்லை என்றாலும் இதற்கான ஆவலும் சுவாரஷ்யமும் குறைந்து போனதென்னவோ உண்மைதான். எதையுமே ஆச்சர்யமாய் பார்க்கத் தோன்றாத மனோநிலையும், ஏமாற்றங்களும் எவர் எதைப் பேசினாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளுமொரு மனோபாவம் பளீச் என்று  என் மனதில் ஒரு குரங்கு குட்டியாய் என் முன் துள்ளிக் குதித்து அவர்களை அடையாளப்படுத்தி விடுவதாலும்...எனக்குள் இருக்கும் குரங்குக் குட்டியை கட்டி மேய்க்கவே நேரம் எனக்கு சரியாய் இருப்பதாலும் தேடலுக்கும் எழுத்துக்கும் தூரம் அதிகமாய்த்தான் போய்விட்டது.

எனது இருப்பை நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அடிப்படையானதொரு எண்ணத்திலிருந்து கிளைத்து எழும் ஓராயிரம் வேசங்கள்தான் மனிதர்களின் செயல்களாகிப் போகிறது. நான் எதையாவது எழுதுவதை தயவு செய்து என் புலம்பலாய், நான் எனக்குள் பேசும் ஒரு பாவனையாய் ஆக்கிக் கொள் என் மனமே என்ற என் வேண்டுதல் பல நேரங்களில் பலிக்காமலும் சில நேரங்களில் பலித்தும் போயிருக்கிறது. எழுதுவது இங்கே மிகப்பெரிய வித்தையாய் பார்க்கப்படுகிறது. எழுதுபவன் மட்டும் இங்கே தன்னை வேற்றுக்கிரக வாசியாய் நினைத்துக் கொள்வது கிடையாது, வாசிப்பவர்களும் அப்படியே நினைக்கிறார்கள்.

சுற்றி நிகழும் நிகழ்வுகளை, ஏதேதோ புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை, உள்ளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வலிகளை, வாழ்க்கை போதிக்கும் பாடங்களை முழுமையாய் வாங்கிக்கொண்டு அந்த உணர்வினை தனக்குள் வகைப்படுத்தி, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் கோர்வையாய் கொண்டு வரத்தெரிந்தவன் இங்கே எழுத்தாளன் ஆகிப் போகிறான். அதாவது சொல்ல வரும் விசயத்தை வார்த்தைகளில் சரியாய் அடுக்கி வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனக்குள் இருக்கும் உணர்வுகளை என்னை புரிந்த ஒரு மனிதரிடமோ, அல்லது படைத்த இறைவனிடமோ அல்லது எனக்குள் நான் பேசியோ பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். பல நேரங்களில் ஓ...என்று சாய்ந்து அழ எனக்கு ஒரு தோள் தேவைப்படுகிறது. அந்த தோள் என் சோகத்தை ஆராயாமல் தன்னுடைய யோசனைகளை எனக்குச் சொல்லி என்னை ஆக்கிரமித்து விடாமல், வாங்கிக் கொள்ளும் தன்மைகளோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இங்கே வலி என்று பகிர முயலும் போதே மனிதர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். தத்துவாசிரியர்கள் நிறைந்த உலகமாய் இது போய்விட்டது. எல்லோரும் கருத்து சொல்கிறார்கள். பணம் சம்பாதிப்பதைப் பெருமையாய் நினைக்கிறார்கள். கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே அவர்களும் கீழே விழுகிறார்கள். இதைத்தான் போலும் எனது ஊர் பேச்சு வழக்கில் "சுற்றிச் சுற்றிப் சுப்பருடைய வட்டைக்குள்தான்" என்று சொல்லுவார்கள். ஆனாலும் என்ன இவர்கள் இதனை மறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு, இத்துனூண்டு வாழ்க்கை இதுக்கு ஏன் இவ்வளவு இறுக்கம்? தலைக்கனம்? திமிர்...? என்று...! ஆமாம்.. நாம் வாழும் வாழ்க்கையின் நீளம் பிரபஞ்சக் கணக்கின் முன்னால் தூசியினை ஆயிரம் தடவை பகுத்துப் பார்த்து, அதையும் கோடி முறை பகுத்துப் பார்த்தாலும் அதைக்காட்டிலும் சிறியது. மனிதர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள இங்கே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...! நான் முந்தியா நீ முந்தியா என்ற போட்டி இடை விடாது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  

போட்டியிலிருந்து நான் விலகி நிற்க எனக்கு காலம் உதவியது. நான் இங்கே இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் யாரிடமும் பகிர விரும்பவில்லை. இப்படியான என் மனோநிலையில் எனது இருப்பு சார்ந்த உணர்வுகளை யாரிடம் சொல்வது....? சாய்ந்து அழ தோள் கிடைக்காத ஒரு நிராயுதபாணியின் கதறலாய்த்தான் என் எழுத்துக்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே சிறப்பு என்று எதுவும் கிடையாது. பிரபஞ்சப் பேரியக்கம்  இடும் பிச்சையை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நாம். இதில் பெரிய பிச்சைக்காரன் சிறிய பிச்சைக்காரன்,  அறிவாளி பிச்சைக்காரன், முட்டாள் பிச்சைக்காரன், அதிகாரம் கொண்ட பிச்சைக்காரன், என்றெல்லாம் வகைப்படுத்தி வேண்டுமானால் கொள்ளலாம். ஆனால்...அத்தனை பேரும் பிச்சைக்காரர்களே...! பிரபஞ்சப் பேரதிர்வின் அலைகள் கடந்து செல்லும் கருவிகள் நாம்.... அவ்வளவே...!

ஒரு இடத்தில் புரிதலோடு வாழ்க்கையை நோக்கி திரும்பிய கணத்தில்தான், அதுவரையில் எவ்வளவு தவறான புரிதல்களோடு வாழ்ந்திருந்திருக்கிறேன் என்ற உண்மை விளங்கியது. சத்தியத்தில் தொடர்பு கொள்ளுதலின் அழுத்தமான ஜோடனையாக உறவுகள்  என் முன் காட்சிப்பட்டுப் போயின. புலன்கள் இழுத்து வந்து போட்ட அனுபவக் கோர்வைகள் எல்லாம் அபத்தமாகி ஒடிந்து விழத் தொடங்கிய கணத்தில் ஆத்மார்த்தமான புரிதல்  கொண்ட ஒரு சிலர்  வார்த்தை பரிமாறல்களும், கவர்ச்சிகரமான பேச்சுகளும், பாவனைகளும், ஜோடனைகளுமின்றி என்னைச் சூழ ஆரம்பித்தனர்.

ஆத்மார்த்த உறவுகள் எப்போதும் புறச்சூழலை வைத்து நம்மிடம் தொடர்பு கொள்வது இல்லை. இந்த உடலுக்குள் இருக்கும் உள்ளமையை விளங்கிக் கொண்டவர்கள் எப்போதும் என்னைப் பற்றி யாதொரு அபிப்ராயமும் கொள்ளாமல், என் வார்த்தைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்று மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். என் சமகால வாழ்க்கையைப் பற்றி அவர்கள் யாதொரு கேள்வியும் கேட்பதில்லை. வாழ்க்கை எப்போதும் தேவைகள் நிறைந்தது இங்கே கொடுத்தலையும், பெறுதலையும் கடந்து நாம் நிற்கும் போதுதான் இதன் முழுமையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். குணம் என்பது சூழ்நிலை என்பதோடு மட்டுமில்லாமல் ஜீன்களின் தாக்கம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.  

மனித வாழ்க்கை சார்ந்து வாழும் வாழ்க்கை என்பதை தவறாகவே போதித்து தவறாகவே பழக்கி விட்டு விடுகிறார்கள். நானும் சார்ந்து வாழ்தல் என்பதை சக மனிதர்கள் மீது கொள்ளும் உரிமையாக எடுத்துக் கொண்டு அதனால் கஷ்டங்களை அனுபவித்தவன். யாரையும் சாராமல் நமது வாழ்வியல் தேவைகளை நாம் செய்து கொண்டே செல்லும் போது நமது செயல்களின் விளைவுகள் யாருக்கோ எப்படியோ சென்று சேர்ந்து விடும். நமது செயல்களுக்கான தர்மத்தையும், நீதியையும் நாம் வரையறுத்துக் கொள்ள எங்கிருந்தோ உதாரணங்களை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் இருந்து நகல் எடுத்து அதன் படியே வாழ முயல்கிறோம் அல்லது இந்த சமூகம் அப்படி நம்மை வாழச் சொல்கிறது.

என்னை சுயமாய் இருக்க ஒரு போதும் இந்த சமூகம் விடவில்லை எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டு மனிதர்கள், எதிர் வீட்டு  உறவுகள், அடுத்த தெருவிலிருப்போர்,  இல்லை யாரோ ஒரு பணக்கரான், யாரோ ஒரு பிச்சைக்காரன், யாரோ ஒரு தொழிலதிபர், ஒரு அறிவாளி, அரசியல்வாதி, நடிகன் என்றெல்லாம் எனக்கு உதாரணம் சொல்லி அது போல நீயும்....என்று ஒரு வசதி செய்து கொடுக்கிறது.

அது போல....நீயும் செய் அல்லது நான் செய்கிறேன் என்று யார் என்னிடம் சொன்னாலும் எழும் கோபத்தை பல நேரங்களில் அடக்கத்தெரியவில்லை. என் கண் முன் இருப்பது எனக்கான ஒரு வாழ்க்கை அதை எவ்வளவு நிறைவாய் நான் வாழ வேண்டும் என்பதற்கு, ஏற்கெனவே வாழ்ந்து முடித்த ஒருவரிலிருந்து உருவி எனக்கு நான் பாடமாக்கிக் கொள்ள வேண்டுமா?

எனது பார்வை புதியது...! எனது காதல் புதியது...! எனது தேடலும், வாழ்க்கையும் புத்தம் புதியது...! அது இதற்கு முன் யாராலும் வாழப்படாததாக முற்றிலும் புதியதாய் புத்துணர்வோடு என்னால் வாழப்படவேண்டும். வரலாறுகளையும் கதைகளையும் நான் என் அனுபவத்திற்காய் கேட்டுக் கொள்கிறேன். பெரிய மனிதர்கள் என்று இந்த சமூகம் கடை பரப்பி இருப்பவர்களின் வாழ்க்கையில் நடந்த நல்ல விசயங்களை மட்டும் வாசித்து விட்டு, சமூகப் பொது புத்தியின் படி...அவர் யாரு தெரியுமா என்று நரம்பு புடைக்க பேசுவது என் வேலையல்ல....

அந்த பெரிய மனிதரின் வாழ்க்கையில் நடந்த யாரும் பார்க்க விரும்பாத பக்கங்களையும் தேடி எடுத்து நான் வாசிக்கிறேன். இது அந்த மனிதரைப் பற்றிய முழுமையான புரிதலை எனக்குக் கொடுக்கிறது. எனக்குள் அவர்கள் பற்றி கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். இது யாரையும் அவமரியாதை செய்யும் ஒரு நிகழ்வாய் எனக்குத் தெரியவில்லை, மாறாக என் சுயத்தை நான் மரியாதை செய்யும் நிகழ்வாய்த்தான் பார்க்கிறேன்.

தொடர்புகள் வாழ்வதற்கு அவசியம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் அதே நேரத்தில் தொடர்புகள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவும் என்றும் அறுதியிட்டு கூற முடியாது. மனித தொடர்புகள் பெரும்பாலும் நம்மை ஆளுமை செய்யவே செய்கிறது. என்னைக் கடந்து அடுத்த நபரிடம் நான் தொடர்பு கொள்ளும் போது அப்படியாய் நான் தொடர்பு கொள்ளும் நபரின் பக்குவமான நிலையும், பக்குவமில்லாத நிலையும் என்னை பாதிக்கச் செய்கின்றன.

குழப்பவாதிகள் குழப்பத்தையும், பேராசைக்காரர்கள் பேராசையையும், ஆணவக்காரர்கள் ஆணவத்தையும், பெருமை பேசுபவர்கள் சுய தம்பட்டத்தையும், கோபக்காரர்கள் கோபத்தையும் எப்படி எனக்கு  கொடுத்துச் செல்கிறார்களோ....

அதே போல.... நிதானமான யோசனை உள்ளவர்களும், தெளிவான புரிதல் உள்ளவர்களும் வாழ்க்கையின் நிலையாமையை விளங்கியவர்களும் அன்பையும், அமைதியையும் தங்களின் இயல்பாய் கொண்டவர்களும்.... அவர்களின் உணர்வுகளை எனக்குக் கொடுத்துச் செல்லவும் செய்கிறார்கள்.

நான் இரண்டாவது சொன்ன வகையினரை விட முதலில் சொன்ன வகையினரே இங்கே மிகுதி சதவீதத்தில் 99.99%. மிகைப்பட்ட பேர்களை விட்டு விலகி நின்று நான் மெளனித்துச் செல்வது ஏன் என்ற எனது கேள்விக்கு எனக்கே இந்த வரிகளை எழுதும் போது விடை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எழுதும் போது தோன்றும் எண்ணங்கள் எனக்குள் இருந்து எழுவது ஆனால் எனக்குச் சொந்தமானது அல்ல...

எனது இறந்தகாலமும் அதன் கற்பிதங்களும் அபத்தங்களை விட்டு என்னை தூர இருக்கச் சொல்லி இருக்கிறது. விலகி இருக்கத்தான் சொல்லி இருக்கிறதே அன்றி கவனிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை.

ப்ரியமாய் நான் இங்கு கிறுக்குவதை வாசிக்கும் என் பாஷை தெரிந்த அத்தனை பேருக்கும் எனது வந்தனங்கள்...!

1 கருத்து:

  1. "நான் இங்கே இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் யாரிடமும் பகிர விரும்பவில்லை"

    மொழி உங்களுக்கு வசப்படுகிறது , அழகான நெறிப்படுத்தப்பட்ட ஒரு கோர்வை , வாசிப்பதற்கு நிறைவாய் இருக்கிறது , வாழ்த்துக்கள்.

    உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் ஒரு சமூகம் சார்ந்த தெளிந்த பார்வை கொண்ட எழுத்துகளை உருவாக்கினால் என்ன , அதற்காய் ஒரு மையம் ஒன்றையோ அல்லது கருத்தாடல் வெளி ஒன்றையோ உருவாக்கினால் என்ன , ஒரு நடுநிலையான பார்வையும் எழுத்தை விற்காத எழுத்தாளர் தலைமுறையும் தேவை நம் சமூகத்திற்கு.

    பதிலளிநீக்கு

உங்கள் பார்வை